இந்தியாவின் கதை- அத்தியாயம் 3. பாரசீகப் படையெடுப்பு

                 பாரசீகர்கள் இந்தியாவின் தில்லியை ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் பெரும் பகுதியை கூட ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் வரலாற்றில் இருந்து பாரசீகர்களை முழுவதுமாக நீக்க என்னால் முடியவில்லை. ஏனெனில், இந்திய மண்ணில் நாடு பிடிக்கும் வேட்கையுடன் கால் பதித்த முதல் அயல் நாட்டு சாம்ராஜ்யம் இது.
முதலில் வந்தது அலெக்சாண்டர் என சிலர் கருதுவதுண்டு. ஆனால் அலெக்சாண்டர் பின்னாளில் இந்தியா வர காரணமே, பாரசீகர்கள் தான்.
                 பாரசீகத்தில் சைரஸ் (Cyrus) என்ற மன்னர் படை பலத்தால் தனது அரசை சாம்ராஜ்யமாக மாற்றுகிறார். இவரது ஆட்சி கி. மு. 559 முதல் கி. மு. 530 வரை இருந்தது. தனது சாம்ராஜ்யத்திற்கு அக்கிமேனியன்           (Achimeninan Empire) பேரரசு என பெயர் சூட்டுகிறார். இந்த பேரரசின் மாபெரும் படை,  அதன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. மேற்கில் கிரேக்கம் வரையிலும்,  கிழக்கில் காந்தாரம் (இன்றைய வட பாகிஸ்தான்), சிந்து நதி வரை அதன் எல்லை பரந்து விரிந்தது.
                   சைரஸ் இறந்த பிறகு அவரது மகன் கேம்பைசஸ் (Cambyses)  ஆட்சிக்கு வருகிறார். இவருக்கு இந்தியா மேல் கவனம் செலுத்த நேரம் இல்லை என்பதே உண்மை. வேறு சில சாம்ராஜ்யங்கள் மீதே படையெடுத்து சென்றார்.
                   கேம்பைசஸ் மறைவிற்கு பிறகு முதலாம் டேரியஸ் (Darius I) ஆட்சிக்கு வருகிறார். இவர் இந்தியாவின் சிந்து சமவெளியைக் கடந்து, பஞ்சாப் வரை வெற்றி கண்டு தனது ஆளுகையின் 28 வது மாகாணமாக அறிவித்துக் கொள்கிறார்.
                   இவருக்கு பின் செர்க்ஸீஸ் (Xerxes),  இரண்டாம் டேரியஸ், இறுதியாக மூன்றாம் டேரியஸ் என அரசர்கள் பாரசீக சாம்ராஜ்யமான அக்கிமேனியன் பேரரசை ஆண்டனர். இந்த பெயர்களை "300 Spartans" என்ற ஒரு ஹாலிவுட் திரைபடத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். இறுதி அரசரான மூன்றாம் டேரியஸின் ஆட்சி முடிவுக்கு வந்தது கி. மு. 330 இல்.  பாரசீகத்திற்கும்,  கிரேக்கத்திற்குமே தீர்க்கப் பட வேண்டிய கணக்குகள் நிறைய இருந்ததால், மேற்கண்ட மன்னர்கள் இந்தியா மீது கவனம் செழுத்த முடியவில்லை.
                     அவ்வளவு ஒன்றும் பெரிதாக இவர்கள் இந்தியாவில் சாதிக்காத போதும்,  இவர்களை பற்றி இவ்வளவு சுருக்கமாகச் சொல்ல ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இந்த காலக் கட்டத்திலேயே பாரசீகத்தின் நிரந்திர பகையாளியான கிரேக்கத்தில் "மாசிடோனியா" என்ற ஒரு இனத்தின் அரசன்,  தனது சின்னஞ்சிறு மகனிடம்,  பாரசீகத்தின் அனைத்து மாகாணத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று தனது ஆசையை கூறிக் கொண்டே இருப்பார். ஆனால் அதற்குள் அவர் காலமாகி விட்டார். அந்த மன்னரின் பெயர் இரண்டாம் பிலிப்ஸ். அந்த சிறு குழந்தையின் பெயர் அலெக்சாண்டர்.  ஆம், பின்னாளில் Alexander, the Great என்று அழைக்கப்பட உள்ள அந்த மாவீரன் தான் அந்த குழந்தை.
                    தோல்வியையே சந்திக்காத ஒரு மாவீரன் அடைந்த ஒரு தோல்வி,  அதுவும் ஒரு இந்தியனிடம்...??!!!
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

Comments

Popular posts from this blog

Ways to reduce my Tax

Benefits of Income Tax Return Filing

UDYAM - Whether a boon or bane for MSMEs